Friday, January 14, 2011

வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட யோசனை

 மாடி வீடு  அல்லது அப்பார்மென்ட் மாதிரியான வீடுகளில்,   இருக்கும் கொஞ்ச  இடத்திலும் நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்தே, கண்ணுக்கும் மனதுக்கும்  குளிர்ச்சியாக செடிகளை வளர வைக்கமுடியும்.  கொஞ்சம் பொறுமையும், அதிகமான விருப்பமும் இருந்தாலே போதும் வீட்டை சுற்றி பசுமை சூழ செய்து விடலாம்.



வீட்டில் மண்தரையில் செடிகள் போட இடம் இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். மண் தொட்டி, சிமென்ட் தொட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை, நல்ல நிலையில் உள்ள பிளாஸ்டிக் சாக்கே போதுமானது.  தொட்டிகளை வாங்கியதும் அதில் தண்ணீர் தெளித்து ஓர் நாள் முழுவதும் ஊற விடுங்கள். சாக்கை வெளி பக்கமாக நன்கு சுருட்டி அல்லது மடித்து பாதி சாக் அளவு  ரெடி பண்ணி வைத்து கொள்ளுங்கள்.

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைப்பது இல்லை. ஆகவே நீங்கள் எடுக்ககூடிய மண்ணையும் வளபடுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டு விட்டு அதனுடன் காய்ந்த சாணம் (இல்லை என்றாலும் பரவாயில்லை ) கிடைத்தால் தூள் செய்து கலந்து வைத்து கொள்ளுங்கள். 

வேப்பமரம் வீட்டின் அருகில் இருந்தால் அதன் இலைகளை (காய்ந்த அல்லது பச்சை) முடிந்தவரை சேகரித்து தொட்டி , சாக்கில் பாதி அளவு போடுங்கள் அதன்பின் மண்ணை
போட்டு நிரப்புங்கள்.  இலை அப்படியே மக்கி உரமாகி விடும் மற்ற இலைகளும் போடலாம் ஆனால் வேப்பிலை மிக மிக சிறந்தது.  இதன் கொட்டைகளை சேகரித்து உடைத்து தூளாக்கி  போடலாம், வேறு வேதி உரங்கள் ஏதும் தேவை இல்லை.  செடிகளும் நன்கு செழித்து வளரும்.

இப்போது நமக்கு மிகவும் அவசியமான செடிகளை பற்றி மட்டும் பாப்போம். தக்காளி, கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும் தனியாக தேடி போக வேண்டாம் என்பது ஒரு வசதி. 

புதினா, கீரை  ---------- நாம் உபயோகித்தது போல் மீதம் இருக்கும் அந்த தண்டுகளை மட்டும் சேகரித்து நல்லதாக பார்த்து எடுத்து அதை அப்படியே மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும் .கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும் , பின் தண்ணீர் தெளித்து விடுங்கள். பொன்னாங்கண்ணி கீரையையும் இந்த முறை படி வளர்க்கலாம். 

கொத்தமல்லி--  வாங்கும் மல்லி வேருடன் இருந்தால் மீண்டும் தளிர்க்க  வைக்க முடியும் , கட் பண்ணி எடுத்தது போக இருக்கும் வேர் பகுதியை அப்படியே மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். பின் தண்ணீர்  விடுங்கள். தண்டு கீரையை  வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் மறுபடி வளர்க்க முடியும்.

தக்காளி,கத்தரி,பாகை --------- கடையில் காய்கறி வாங்கும்  போதே இரண்டு அல்லது மூன்றை நன்கு  பழுத்ததாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். பின் அதன் தோலை எடுத்து விட்டு விதைகளை மட்டும் ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.   சாணி கிடைத்தால் அதை தண்ணீரில் கரைத்து அதில் விதைகளை ஒரு நாள் ஊற வைத்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பரவாயில்லை.

பிறகு தக்காளி, கத்தரி விதைகளை கொஞ்சம் எடுத்து அப்படியே தொட்டியில் விதைத்து விடுங்கள்.  கொஞ்சம் வளர்ந்த பின்னர் தனியாக கன்றுகளை எடுத்து சாக்கு, தொட்டியில் நட்டு  விடுங்கள், தண்ணீர் விடுங்கள் . அவ்வளவுதான்.

பச்சை மிளகாய்க்கு, மிளகாய் வற்றலில் இருந்து விதைகளை எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது மழை காலமாக இருப்பதால் செடிகளை நட இதுவே உகந்த  நேரம். வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

அக்கறையும், கவனமும் இருந்தால் வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும்.

1 comment: